அயலி பெண்ணின் வலிமையையும், கல்வியையும் ஒரு சேர பறை சாற்றும் துணிச்சல் நிறைந்த சாகசப்பெண்

மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும், 8 ஆம் வகுப்பு படிக்கும் தமிழ் செல்வி என்ற இளம் பெண்ணைப் பற்றிய கதை தான் அயலி. அதோடு, வீரப்பண்ணை கிராமத்தில் தற்போதுள்ள பழக்கவழக்கங்கள், பருவமடைந்தவுடன் பெண்களை திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற நடைமுறைகளை பற்றி இந்த கதை பேசுகிறது. இந்த பாரம்பரியத்தை கடைபிடிக்காவிட்டால், அயலி தேவி கோபமடைந்து கிராம மக்களை சபிப்பாள் என்பது இந்த கிராமத்து மக்களின் நம்பிக்கை.
பழங்கால நம்பிக்கைகள் மற்றும் பழக்கவழக்கங்களை உடைத்து, இளம் பெண் மருத்துவராக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய அனைத்து முரண்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகிறாள். இருப்பினும், வீரப்பண்ணை கிராமத்தில் உள்ள மற்ற சிறுமிகளுக்கு வழி காட்டக்கூடிய மாற்றத்தை கொண்டு வருவதில் அவள் வெற்றி பெறுவாளா?

தனது தேடலை அடைய போராடும் தமிழ்ச் செல்வியின் பயணத்தை இந்த கதை கூறுகிறது.இளைஞர்களின் மனக்கசப்பு, புத்திசாலித்தனம் மற்றும் சுதந்திரமான விருப்பத்தை எடுத்துக்காட்டும் ஒரு புதிய வயதுக் கதை தான் அயலி. பழங்கால பழக்க வழக்கங்களையும் சடங்குகளையும் உடைத்து, இந்த நம்பிக்கையை ஒரு இளம் பெண் தனக்கு சாதகமாக்கி மூடநம்பிக்கையை எப்படி ஒட விரட்டுகிறாள் எழுச்சியையும், படிப்பையும் சொல்லி புரிய வைத்து சிந்திக்க வைத்துள்ளார் இயக்குனர் முத்துக்குமார். இன்றைய காலகட்டத்தில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்தாலும், இன்னும் பல கிராமங்களில் சில மூடநம்பிக்கைகள், சம்பிரதாயங்கள் ஆகியவற்றை கடைப்பிடித்து வருவதை சுட்டிக்காட்டி விழிப்புணர்வை ஏற்படுத்தி பெண் கல்வி முக்கியம் என்பதை வலியுறுத்த முற்படுகிறார் இயக்குனர் முத்துக்குமார்.

அம்மா குருவம்மாளாக அனுமோல், அப்பா தவசியாக அருவி மதன், சத்திவேலாக லிங்கா, திருப்பதியாக சிங்கம்புலி, கணக்கு வாத்தியார் மூர்த்தியாக டிஎஸ்ஆர்.தர்மராஜ், தோழி மைதிலியாக லல்லின், ஈஸ்வரியாக காயத்ரி, கயல்விழியாக தாரா, செல்வியாக மேலோடி, முருகனாக பிரகதீஷ்வரன், சேகராக ஜென்சன் ஆகியோர் கிராமத்து மண் மாறாத கதாபாத்திரங்களாக ஜொலிக்கிறார்கள்.
